மெக்சிகோ : மெக்சிகோவில் மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து சாண்டியாகொ டி யொசண்ட் நகருக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. மெக்சிகோ நாட்டின் தெற்கு மாநிலமான ஒசாகாவின் மிக்ஸ்டெகா பகுதியின் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் சம்பவ இடத்திலேயே 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் பேருந்தின் சிதைந்த பாகங்களை கண்டறிந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 29 பேரின் சடலங்களை மீட்ட அவர்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 20 பேரை சிகிச்சைக்காகபிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பலர் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.