மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் மழை தணிந்ததால், அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இருந்தும் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது. 60 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர் மட்டம், நேற்று 99.79 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின்அளவு விநாடிக்கு 1,282 கனஅடியில் இருந்து விநாடிக்கு 1,537 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 64.56 டி.எம்.சியாக உள்ளது.