Sunday, September 8, 2024
Home » மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிலத்தடி நீரை சேமிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிலத்தடி நீரை சேமிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

by Ranjith

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீரை சேமிக்க கவனமாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை பெற்று, விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தாண்டு காவிரி டெல்டா பகுதியிலுள்ள 13 மாவட்டங்களில், 5,339 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீரை கடைமடைக்கு கொண்டு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 11 மாவட்டங்களிலுள்ள 925 முறைசார்ந்த ஏரிகளில் 8.513 டி.எம்.சி நீரினை நிரப்பும் வகையில் ஏரிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், முதல்வர் டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களுக்காக குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருந்தார்.

அந்த பணிகளுக்காக ரூ.78.67 கோடி நிதி வழங்கி கடந்த ஜூன் 22ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தொகுப்பில் நெல் இயந்திர நடவடிக்கைக்கான ஊக்கத் தொகை, நெல்விதை விநியோகம் மற்றும் பல்வேறு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேட்டூர் அணையில் கடந்த ஜூலை 17ம் தேதி முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன. கர்நாடாகவிலுள்ள 4 முக்கிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வினாடிக்கு சுமார் 1.48 லட்சம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், இந்த நீர்வரத்து மேலும் மூன்று நாட்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன சாகுபடிக்கு நீரை திறந்து விடுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரினை செம்மையாகப் பயன்படுத்தும் வகையில் மேட்டூர் அணை திறப்பதற்கு முதல்வர் ஆணையிட்டார்.

முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடப்படும். தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு காவிரி நீர் திறந்துவிடப்பட உள்ளது. இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கினார்.

குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகளை முன்னதாக மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், திறந்து விடப்படும் நீரைச் சேமித்து வைப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து நீர்வளத் துறையும், மாவட்ட கலெக்டர்களும் கவனமாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுமெனவும், அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்க வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வேளாண் துறை மற்றும் நீர்வளத்துறையின் அரசு உயர் அலுவலர்களும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

17 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi