சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மெட்ரோ ரயிலில் கடந்த வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்’ என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் நிர்வாகம், அந்த நிறுத்தம் வரும் போது, ‘புறநகர் பேருந்து நிறுத்தம்’ என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழ்நாடு அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்யவில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி முழுமையாக அறிவிப்பு செய்யாமல், தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அதிமுக சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.