Tuesday, September 17, 2024
Home » மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குஜராத்திற்கு ரூ.6500 கோடி தமிழ்நாட்டிற்கு பூஜ்ஜியம்: தயாநிதி மாறன் எம்பி கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குஜராத்திற்கு ரூ.6500 கோடி தமிழ்நாட்டிற்கு பூஜ்ஜியம்: தயாநிதி மாறன் எம்பி கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

by Ranjith

புதுடெல்லி: மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக குஜராத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்று திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்வி விவரம் வருமாறு: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக தற்போது வரை ஒதுக்கிய நிதி மற்றும் அனுமதி விவரம் என்ன?.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏன்?. இந்த திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் கொடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன்?. இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு எடுத்த முடிவு என்ன?. கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் நடக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மாநிலம் மற்றும் நகரம் வாரியாக ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதிவிவரங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் தோகன் சாகு அளித்த பதில் வருமாறு: சென்னையில் 118.9 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதை அமைக்க ரூ.63,246 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழ்நாடு அரசு தயாரித்து அனுப்பி வைத்தது. மிகவும் அதிக மதிப்பு கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியம் மற்றும் அதற்கு தேவையான வளங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் அனைத்தும் மாநில திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து நிதியையும் தமிழ்நாடு அரசுதான் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் தற்போது 12 மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. நாக்பூர் 2ம் கட்ட பணிகளுக்கு 2022 டிசம்பர் மாதமும், புனே திட்டத்திற்கு 2023 அக்டோபரிலும், கான்பூர் மெட்ரோவுக்கு 2019 மே மாதமும், ஆக்ரா திட்டத்திற்கு 2019 மே மாதமும், கொச்சி முதல்பாதை விரிவாக்க திட்டத்திற்கு 2023 பிப்ரவரியிலும், கொச்சி 2ம் கட்ட பாதைக்கு 2022 நவம்பரிலும்,

பெங்களூரு மெட்ரோ ரயில் 2ம்கட்டபாதை பணிகளுக்கு 2021 ஜூன் மாதமும், டெல்லி மெட்ரோ 4ம் கட்ட பாதை திட்டத்திற்கு 2019 ஜூலையிலும், குருகிராம் திட்டத்திற்கு 2023 ஜூலையிலும், டெல்லி மெட்ரோ 4ம் கட்ட பாதையில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 2024 மார்ச் மாதமும், அகமதாபாத் இரண்டாம் கட்ட பாதை பணிகளுக்கு 2019 ஜூன் மாதமும், சூரத் மெட்ரோ திட்டத்திற்கு 2019 ஜூன் மாதமும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு இதுவரை ஒன்றிய அரசு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. அதே சமயம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் 2,596 கோடியும், சூரத் திட்டத்திற்கு ரூ.3961 கோடியும் என மொத்தம் ரூ.6558 கோடி நிதியைஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. உபியில் கான்பூர் திட்டத்திற்கு ரூ.2629 கோடி, ஆக்ரா திட்டத்திற்கு ரூ.1913 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi