மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்..!!

சென்னை: மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகள், மின்னணு பயணச்சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஆலோசகர் கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இந்நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்காகவும், காகித பயன்பாட்டைக் குறைத்து பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் QR பயணச்சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் QR பயணச்சீட்டுகளை பெறுதல், WhatsApp, Paytm, PhonePe மூலம் QR பயணச்சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும் விமான நிலையம் ஆகிய இரண்டு மெட்ரோ இரயில் நிலையங்களில் முதலில் முயற்சிக்கப்பட்டு, இது பயணிகளின் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை கவுண்டரில் உள்ளிடுவதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு நேரடியாக அவர்களது மொபைலுக்கு அனுப்பபடும். “பரிவர்த்தனை பாதுகாப்பானது, பயணிகளின் செல்போன் எண்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அமைப்பில் சேமிக்கப்படவில்லை, பயணிகளின் தனியுரிமை உறுதிசெய்யப்படுகிறது.”

மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

1. QR பயணச்சீட்டுகளுக்கு மெட்ரோ நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டரை அணுகவும்.
2. சேருமிடம் மற்றும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து ஆபரேட்டரிடம் தெரிவிக்கவும்.
3. பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டரில் நிறுவப்பட்டுள்ள கீபேட் மூலம் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடவும்.
4. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் WhatsApp-க்கு உங்கள் பயணச்சீட்டு விவரங்கள் அடங்கிய QR பயணச்சீட்டை பெறவும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும், பசுமையான சூழலை மேம்படுத்தவும் மற்றும் டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நம்புகிறது.

Related posts

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு