புதுடெல்லி: மாநிலங்களவையில் 6 புதிய உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். ஒன்றியத்தில் புதிய அரசு அமைந்த பின் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேர் நேற்று பதவி ஏற்று கொண்டனர். அவர்களை அவை தலைவர் ஜகதீப் தன்கர் வரவேற்றார். முதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகிலேஷ் பிரசாத் சிங்(பீகார்) பதவி ஏற்று கொண்டார்.
தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சர்ஃபராஸ் அகமது(ஜார்க்கண்ட்) மற்றும் பாஜ உறுப்பினர் பிரதீப் குமார் வர்மா(ஜார்க்கண்ட்) பதவி ஏற்றனர். இதையடுத்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த பாஜ தலைவர்கள் பன்ஷிலால் குர்ஜார், மாயா நரோலியா மற்றும் பால்யோகி உமேஷ்நாத் ஆகியோரும் பதவி ஏற்றனர். புதிய உறுப்பினர்கள் பதவியேற்றபோது பிரதமர் மோடி, பாஜ மாநிலங்களவை முன்னவர் ஜே.பி.நட்டா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இருந்தனர்.