சென்னை: கிண்டி, சைதை ரயில் நிலையங்களில் பல வசதிகளை ஏற்படுத்தினேன் என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தெரிவித்தார். தென்சென்னை அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2014-2019 வரை இருந்த போது, நான் சைதாப்பேட்டை தொகுதியில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிக்காக கிட்டத்தட்ட ரூ.9 கோடி மதிப்பீட்டில் பயணிகளின் வசதிக்காக இருபுறமும் நடைமேடை அமைக்க வலியுறுத்தினேன்.
அதே போல் கிண்டி ரயில் நிலையத்திலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.9 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினேன். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அங்கு சிசிடிவி இல்லாததுதான் காரணம். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தினேன். இவ்வாறு தெரிவித்தார்.