Thursday, September 19, 2024
Home » மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து எதிர்க்கிறோம் தமிழக விவசாயிகள் நலன் காக்க சட்டபூர்வமான நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து எதிர்க்கிறோம் தமிழக விவசாயிகள் நலன் காக்க சட்டபூர்வமான நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

by Ranjith

சென்னை: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்; தமிழக விவசாயிகளின் நலன் காக்க அரசு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்து வருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுத்து வரும் முயற்சிகளை, தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது.

வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன., கர்நாடக அரசின் 2022-23 நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும், வலியுறுத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், முதல்வரின் ஆலோசனையின்படி, அனைத்து கட்சி சட்டப்பேரவை தலைவர்கள் குழுவினை தலைமையேற்று, மீண்டும் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து, இதுகுறித்த பொருள் பற்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாது என ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலரும் கடந்த பிப்.20ம் தேதி ஒன்றிய ஜல்சக்தி மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகங்களின் செயலர்களுக்கு எழுதிய கடிதங்களிலும், கோரியுள்ளார்.

தொடர்ந்து, நான் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது அணைத் திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை அவர்களே தெரிவித்திருப்பதை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மேகதாது திட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டாம் என அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வளக் குழுமத்திற்கும் அறிவுறுத்துமாறு கோரினேன்.

இதுதவிர, ஒன்றியத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து 2023-24 பாசன ஆண்டில் பில்லிகுண்டுலுவில் வழங்க வேண்டிய நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு கோரியதுடன், மேகதாது அணைத் திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இத்திட்டத்தினை நிராகரிக்குமாறு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும் வலியுறுத்தி, மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை வழங்கினேன்.

அந்தவகையில் மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, தமிழ்நாடு அரசு சார்பாக வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு பிப்.5ம் தேதி இறுதி தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், கர்நாடகாவில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும், கர்நாடக அரசு இத்திட்டத்திற்கு ஒன்றிய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதிநீர் இயக்குனகரத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல், இவை எதையும் பெறாமல் கட்ட இயலாது. கர்நாடக அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi