பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள எச்பிசிஎல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூன்று பேரை வேலை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் எச்பிசிஎல் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 75க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்களான சரண்ராஜ், சதீஷ், சரத்குமார் ஆகிய மூன்று நபர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தது.
இது சம்பந்தமான புகாரின் பேரில் பொன்னேரி தாசில்தார், பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வரியா ராமநாதன், மீஞ்சூர் போலீஸ் அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் எச்பிசிஎல் நிறுவன அதிகாரிகளுடன் மூன்று முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில், மூன்று ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என, கடந்த பிப்ரவரி மாதம் சமரச பேச்சுக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதனால் வரை அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே, இதனை கண்டித்து நேற்றுமுன்தினம் முதல் கடந்த இரண்டு தினங்களாக வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னோரி தாசில்தார் செல்வகுமார் நேற்று மதியம் மீஞ்சூர் போலீசாருடன் சென்றனார். பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எனவே, தாசில்தார் பேசுகையில், ஒரு வாரத்தில் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்த்து ெகாள்ளப்படுவார்கள் என கூறினார். இதனால் உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.