பொன்னேரி: மீஞ்சூர் பஜாரில் நின்றிருந்த அரசு பேருந்தை ஒரு பள்ளி மாணவன் இயக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து நேற்று மாலை மீஞ்சூர் நோக்கி ஒரு மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தில், மணலி புதுநகரில் இயங்கும் தனியார் பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் ஏறி மீஞ்சூருக்கு பயணம் செய்துள்ளனர். இப்பேருந்து மீஞ்சூர் பஜாரில் வந்தபோது பேருந்தின் பின்பகுதியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டு டிரைவர் இறங்கி சென்று பார்த்துள்ளார். அதே நேரத்தில், பேருந்துக்குள் இருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன், அப்பேருந்தை கியர் போட்டு இயக்க முயற்சித்துள்ளார். தனது சீட்டில் அமர்ந்து யாரோ பேருந்தை இயக்க முயற்சிப்பதை பார்த்து டிரைவர் ஓடிவந்து ஏறினார். பின்னர் அந்த மாணவனை பிடிக்க முயற்சித்தபோது, டிரைவரை தாக்க முயன்றிருக்கிறார்.
தகவலறிந்து மீஞ்சூர் போலீசார் வருவதை அறிந்து, அரசு பேருந்தை இயக்க முயற்சித்த பள்ளி மாணவன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அப்பேருந்தில் இருந்த அதே பள்ளியை சேர்ந்த பிற மாணவர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒருவேளை அப்பள்ளி மாணவன் அரசு பேருந்தை ஓட்டியிருந்தால், பஜாரில் உள்ள கடைகள் மற்றும் மக்கள்மீது மோதி பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். எனினும், டிரைவரின் சமயோஜித செயலால் மீஞ்சூர் பஜாரில் பெரிய விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.