பெரம்பூர்: ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்த அக்கிலு சமா (22), பெங்களூருவில் உள்ள ஓமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் சென்னை வந்த இவர், நேற்று முன்தினம் பெரம்பூர் மேம்பாலம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த 2 பேர், இவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இவர் தர மறுத்ததால், சரமாரியாக தாக்கி, தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அவரது முகத்தில் குத்திவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முகத்தில் 7 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.