மதுரை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் திங்கட்கிழமைக்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயின்று வருகின்றனர். தேர்தலுக்காக மருத்துவக் கல்லூரியை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ ஆய்வகங்கள், வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மறுப்பதாகவும் மனுவில் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.