திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சுகன்யா தலைமை தாங்கினார். இதில், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும்.
அரசாணை 89ன் படி பிரதிமாதம் 5ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், பணி நேரத்திற்கு போக்குவரத்து, உணவுப்படி வழங்க வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், அதேபோல், மருத்துவ உபகரண படியினை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் லட்சுமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், உள்ளாட்சி சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், புதுவாழ்வு திட்ட மாநில தலைவர் தமிழ்அரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் ரூசோரியா, கௌரி, தனலட்சுமி, விமலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் மனு கொடுத்தனர்.