ஆபாச செயலி மூலம் பழகி வரவழைத்து மருத்துவ மாணவரை மிரட்டி பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவரிடம், ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 26 வயது வாலிபர், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை கடந்த 15ம் தேதி ஆபாச செயலி மூலம் சந்தோஷ் என்பவர் தொடர்பு கொண்டு, நாமக்கல் பூங்கா சாலைக்கு வரும்படி அழைத்துள்ளார்.

அதன்படி அவர் அங்கு சென்றபோது ஸ்கூட்டரில் வந்த ஒருவர், சந்தோஷ் என அறிமுகம் செய்து கொண்டு பூங்கா பின்புறமுள்ள பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கிருந்த 6 பேர் சேர்ந்து, மருத்துவ மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவர், தனது கல்லூரி பேராசிரியருக்கு போன் செய்து ₹5 ஆயிரம் கேட்டு ஒரு செல்போன் நம்பரை கூறி அதற்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி அந்த பேராசிரியர் பணம் அனுப்பியுள்ளார். இதை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், மாணவரிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து அதன் மூலம் ₹30 ஆயிரம் எடுத்துக் கொண்டு அவரை விடுவித்தனர். அங்கிருந்து தப்பி வந்த மாணவர், இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகாரளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரிடம் பணம் பறித்த காமராஜர் நகரை சேர்ந்த புருஷோத் (25), மாபு பாட்ஷா (23), பொன்னர் (25) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஆபாச செயலி மூலம் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கல்லூரி மாணவர், ஆசிரியர் போன்ற நபர்களை பணம் பறிக்கும் கும்பல் தேர்வு செய்து, அவர்களை தனியாக வரவழைத்து மிரட்டி ஆபாசமாக போட்டோ எடுத்து, அதனை ஆபாச செயலியில் பதிவேற்றம் செய்வதாக கூறி பணத்தை பறித்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்