ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில், முதல் முறையாக பதக்க வேட்டையில் சதம் அடிப்பதை உறுதி செய்துள்ள இந்தியா சரித்திர சாதனையை வசப்படுத்துகிறது. சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. எதிர்பார்த்ததைப் போலவே, 2018 ஜாகர்தா போட்டியில் அதிகபட்சமாக 70 பதக்கங்கள் வென்று படைத்த சாதனையை முறியடித்து முன்னேறிய இந்திய குழுவினர், தற்போது முதல் முறையாக பதக்க வேட்டையில் சதம் அடிப்பதை உறுதி செய்துள்ளனர். இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா மேலும் 7 பதக்கங்களை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளதால், நடப்பு தொடரை 102 பதக்கங்களுடன் நிறைவு செய்ய உள்ளது. இன்று நடக்கும் போட்டிகளில், இந்தியாவுக்கு வில்வித்தையில் 3, கபடியில் 2, கிரிக்கெட் மற்றும் பேட்மின்டனில் தலா 1 பதக்கங்கள் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.