சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதில் செல்ல இருந்த 147 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று காலை 10.05 மணிக்கு 147 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அதாவது, டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வரும் ஏர் இந்தியா விமானமே, மீண்டும் காலை 10.05 மணிக்கு டெல்லிக்கு புறப்படும். இந்நிலையில் அந்த விமானம் காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தது. அதில் இருந்த விமானி, ‘‘விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்புதான், மீண்டும் விமானத்தை இயக்க முடியும்’’ என குறிப்பு எழுதி விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை. விமானம் தாமதமாக புறப்படும் என்று கூறி, ஓய்வறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்ஜினியர்கள், பழுதடைந்த விமானத்தின் இன்ஜினை சரி செய்ய முயன்றனர். ஆனால், நேற்று பிற்பகல் 2 மணி வரையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள், ஆத்திரமடைந்து ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பகல் 2 மணிக்கு, விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. அதோடு விமானத்தில் பயணிக்க இருந்த 147 பயணிகளையும் இண்டிகோ, விஸ்தாரா, மாலை மற்றும் இரவு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா போன்ற மாற்று விமானங்களில் டெல்லிக்கு அனுப்பும் வகையில், டிக்கெட்டை மாற்றி வழங்கினர். சில பயணிகள் டெல்லி விமான பயணத்தையே ரத்து செய்தனர்.