தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையர் அழகுமீனா தலைமையில், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம், 32வது வார்டுக்குட்பட்ட பர்மா காலனி, குன்றுமேடு, ஏரிக்கரை தெரு, புலிக்கொரடு ஆகிய பகுதிகளில் முடிவடைந்த சாலை பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக பர்மா காலனி பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புலிக்கொரடு பகுதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் குன்றுமேடு பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்து, புனரமைப்பு பணியினை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் குன்றுமேடு பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு, பழுதடைந்துள்ள மின் மோட்டாரை மாற்றியமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆனந்தஜோதி, உதவி பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.