இந்நிலையில், திருநெல்வேலி தொகுதிக்கு நேற்று முன்தினம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்காததால் திமுக தலைமை அதிருப்தி அடைந்தது. இந்த தகவல் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய நிலையில், உடனடியாக ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்ததால் தமிழக காங்கிரசார் மத்தியில் அதிருப்தி நிலவியது. மேலும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்புக்கான தாமதம் என்னவென்றால், அதிகமானவர்கள் அந்த தொகுதியை கேட்டது தான். அதாவது சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிக்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர், பிரவீன் சக்கரவர்த்தி, மூத்த தலைவர் தங்கபாலு, நாசே ராமச்சந்திரன், ராமசுகந்தன் போன்றவர்கள் இந்த தொகுதிக்காக டெல்லி மேலிடத்திடம் லாபி செய்தனர். இதனால் யாருக்கு சீட் வழங்குவது என்பது பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு அதிரடியாக வழக்கறிஞர் சுதாவை மயிலாடுதுறை வேட்பாளராக மேலிடம் அறிவித்தது. இவர் அடிப்படையில் வழக்கறிஞராக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். பல மூத்த தலைவர்கள் மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்ற போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் சுதாவை வேட்பாளராக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை வேட்பாளராக சுதாவை அறிவித்திருப்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மேலிட தலைவர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இடையே கடும் போராட்டம் நீடித்திருக்கிறது. இந்நிலையில் ஒரு சில தொகுதிகளுக்கு டெல்லி மேலிட தலைவர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழக தலைமை சிலருக்கு வாய்ப்பளிக்க கூறிய போதும், மேலிட தலைவர்கள் மாற்று வேட்பாளர்கள் சிலரை முன்னிறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைகளில் ராகுல்காந்தி தலையீட்டு சமரசபடுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லி தலைவர்களிடம் வழங்கிய 3 பேர் கொண்ட பட்டியலில் வழக்கறிஞர் சுதா பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேலிட செல்வாக்கு அவருக்கு முழுமையாக இருந்ததால் இந்த வாய்ப்பை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி, தங்களுக்கான கோட்டாவை கேட்டு கே.சி.வேணுகோபாலுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கே.சி.வேணுகோபால் மற்றும் மேலிட தலைவர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் உள்ளிட்டவர்கள் வக்கீல் சுதாவுக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவரது பெயர் ராகுல்காந்தியிடம் வழங்கப்பட்டது.
பாதயாத்திரை தொடக்கம் முதல் சுதா அவருடன் பயணித்து நல்ல பெயரை வாங்கியுள்ளார். இதனால் ராகுல்காந்தியும் உடனடியாக அவரது பெயரை டிக் செய்துள்ளார். இதனால் தான் இத்தனை மூத்த தலைவர்கள் முட்டி மோதினாலும் வக்கீல் சுதாவுக்கு சீட் வழங்கப்பட்ட தகவல் காங்கிரசாரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.