புதுடெல்லி: பிரதமர் மோடி மே 19 முதல் 24ம் தேதி வரை ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி மே 19ம் தேதி முதல் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 19ம் தேதி ஜப்பான் செல்லும் அவர் அங்கு ஹிரோஷிமா நகரில் நடக்கும் ஜி7 நாடுகள் மாநாட்டில் மே 21ம் தேதி வரை பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் அமைதி, நிலைத்தன்மை, உணவு, உரம், உற்பத்தி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதை தொடர்ந்து பப்புவா நியூ கினியா நாட்டில் போர்ட் மோர்பே நகருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு மே 22ம் தேதி இந்தியா-பசிபிக் கூட்டுறவு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இறுதிகட்டமாக மே 22 முதல் 24ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு செல்லும் அவர் அங்கு குவாட் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.