நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த மாதம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மே மாதம் மழை பெய்யும் என்ற தகவல் மக்களிடையே மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.