மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

திருப்பூர்: மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணி ராணி சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக திருமணத்திற்கு பெண் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30) என்பவர் வாலிபருக்கு அறிமுகமானார். பின்னர் இவர்கள் இருவரும் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். வாலிபரின் பெற்றோரும் அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். மணப்பெண்ணுக்கு தேவையான நகை, புடவை அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர்.

வாலிபருடன் 3 மாதம் குடும்பம் நடத்தி கொண்டிருந்த சந்தியா கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது ஆதார் அட்டையை சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரணை செய்தபோது கோபமடைந்த சந்தியா, வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை என மிரட்டி உள்ளார். இதனால் உஷாரான வாலிபர், பெண்ணிடம் சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. சந்தியாவின் திருமண பட்டியலில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலதிபர்கள் இவருடன் திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியின் மோசடி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு