திருமலை: கோயிலில் திருமணம் செய்து 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபோதும் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிகையின் தொடர்பில் உள்ளார் என்று இளம்பெண் போலீசில் புகார் அளித்த சம்பவம் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரையுலகில் பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண். இவர் நடித்த ‘திரகபாதரா சாமி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ராஜ் தருண் மீது ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற இளம்பெண் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.