சென்னை: மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். கடந்த 24ம்தேதி மெரினா நீச்சல் குளத்தை ஆய்வு செய்தார். அப்போது, நீச்சல் குளத்தை உயர்தரத்தில் மேம்பாடு செய்யும் வகையில், பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மெரினா நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் குளம் அதை சுற்றிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் மேம்பாடு, புதிதாக கண்கவர் ஓவியங்கள் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, நீச்சல் குள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள், பயனாளர்களுக்கு தேவையான இதர வசதிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. இதை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார்.
அப்போது, பயனாளர்கள் நீச்சல் பயிற்சியை சிறப்பாக மேற்கொள்கின்ற வகையிலும், நீச்சல் போட்டிகள் நடத்துகின்ற வகையிலும் இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.