சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 5 மாதத்திற்கு பிறகு நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னை மெரினா நீச்சல் குளத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக நீச்சல் குளம் மூடப்பட்டிருந்தது. நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீர் வர ஏற்பாடு, நீச்சல் பயிற்சி செய்ய வசதிகள், உடை மாற்றும் அறை, கழிவறை போன்றவை சீரமைக்கப்பட்டது. புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.
நாளை (அக்.09) முதல் மெரினா நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும். நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்துக்கு பெரியவர்களுக்கு ரூ.50ஆக கட்டணம் எனவும் 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ரூ.30ஆக கட்டணம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் புக் செய்தால் 10% சலுகை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.