மெரினாவில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: மெரினாவில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதை அனுசரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படை 1.70 லட்சம் வீரர்களை கொண்டுள்ளது. 1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் நமது போர்ப்படையில் உள்ளன.

விமானப்படையை நிறுவிய தினத்தை அனுசரிக்கும் வகையில் இந்தாண்டு ‘ஏர் ஷோ’ என அழைப்படும் பிரம்மாண்டமான வான் வழி சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி நிகழ்த்தப்பட உள்ளன.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அதேபோல், இலவசமாக மக்கள் சாகச நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கபட உள்ளதால் அன்றைய தினம் மெரினா கடற்கரைக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று இறுதிக்கட்ட விமான சாகச ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று இறுதிகட்ட விமான சாகச பயிற்சி நடைபெறவுள்ளதால் 46-விமானங்கள் ரத்து செய்யபப்ட்டன.

மெரினாவில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் கொடியேற்றத்துடன் புரட்டாசி திருவிழா துவக்கம்: 13ம் தேதி தேரோட்டம்

மழைகால முன்னெச்சரிக்கை குறித்து விமான நிலைய இயக்குனருடன் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம்