இந்நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் பணிகளின் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் வர உள்ளதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா குடிநீர், கழிவறை, அடிப்படை வசதிகள், கடல் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர் நேரில்ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், முதலுதவி சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவைக்கான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், ஒன்றிய அமைச்சர்கள், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க கூடிய நிலையில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் கூடாரங்களின் பணிகளையும் களஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.