சென்னை: மார்ச் 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
மார்ச் 4ம் தேதி, சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிலையில், மீண்டும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15ம் தேதி சேலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16ம் தேதி கன்னியாகுமரி செல்கிறார். பிறகு, 18ம் தேதி கோவை செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ம் தேதி தான் சென்னை வந்தார். பின்னர், கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த ஒரு சில வாரங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மார்ச் 15ம் தேதி தமிழகம் வருகை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது.