விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாராய வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகம், முத்து, ரவி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது:
புதுச்சேரி – காரைக்கால் எல்லையில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது செய்யப்பட்டனர். 5,901 லிட்டர் கள்ளச்சாராயம், 1,106 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 203 பேரில் 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மரக்காணம் கள்ளச்சாராய மரணத்தை அடுத்து விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போலீஸ் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம், மதுபானம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து எல்லையில் போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.