மன்னார்குடி அருகே செல்போன் டவரில் சிக்னல் கன்ட்ரோல் இயந்திரங்கள் திருட முயற்சி

*ஆந்திரா பதிவெண் காரில் வந்த மர்ம நபர்கள் யார்?

மன்னார்குடி : செல்போன் டவரில் சிக்னல்கன்ட்ரோல் இயந்திரங்கள் திருட முயற்சி ஆந்திரா பதிவெண் காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் கோட்டூர் தோட்டம் சாலையோரம் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான 120 அடி உயரம் கொண்ட டவர் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆந்திரா மாநிலம் பதிவெண் கொண்ட கார் வந்து நின்றது. காரில் இருந்து 2 பேர் இறங்கினர்.

இதில் ஒருவர் செல்போன் டவரில் ஏறி சிக்னல் கண்ட்ரோல் இயந்திரத்தை கயிறு கட்டி இறக்கினார். இதில் இரண்டு இயந்திரங்களை இறக்கிய நிலையில், 3வது இயந்திரத்தை கயிறு கட்டி இறக்க முயற்சித்தார்.அப்போது அருகில் இருந்த வயர் ஒன்று அறுந்ததால் சென்னையில் உள்ள நிறுவன உயர் அதிகாரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி, கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்ஐ நிதி, எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும், செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி அருகில் இருந்த வயல்வெளியில் தப்பி ஓடி விட்டார். மற்றொரு நபர் காரில் தப்பி சென்றார். இதையடுத்து கொள்ளையர்கள் விட்டு சென்ற ₹5 லட்சம் மதிப்பிலான மூன்று சிக்னல் கண்ட்ரோல் இயந்திரங்களை போலீசார் மீட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவரில் திருட முயற்சித்த நபர்கள் ஆந்திராவை சேர்ந்த கொள்ளையர்களா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்