டெல்லி: வரும் அக்.1ம் தேதி முதல் மணிப்பூரில் 19 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற ஒட்டுமொத்த மணிப்பூர் பகுதிகளும் பதற்றமிக்க பகுதிகளாக கருதப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் ஒன்றிய அரசின் உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்ற அறிவிப்பையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பதற்றம் நிறைந்த பகுதிகள் எவை எவை, எந்தெந்த பகுதிகளில் கடுமையான வன்முறைகள், தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவை இருக்கிறது, அதனடிப்படையில் பதற்றம் நிறைந்த பகுதிகள் எவை என கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது வருடாந்திர மறுஆய்வு பணிகள் கடந்த ஒருவாரமாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடைபெற்று வந்தது. அந்த ஆலோசனைக்குப்பிறகு தற்பொழுது மணிப்பூரை பொறுத்தளவில் வன்முறை அதிகளவில் இருப்பதன் காரணமாக பதற்றமான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.