இம்பால்:மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்று பாஜவை சேர்ந்த முதல்வர் பிரேன் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. நேற்று பிற்பகல் முதல்வர் பிரேன் சிங் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்திக்க புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கே திரண்டு இருந்த பாஜவை சேர்ந்த பெண் தொண்டர்கள் முதல்வர் கான்வாய் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர் ராஜினாமா செய்யக்கூடாது என்று முழக்கமிட்டனர். இதனால் முதல்வர் பிரேன் சிங் திரும்பி சென்றார். இந்நிலையில் முதல்வர் தனது டிவிட்டர் பதிவில். ‘‘இந்த முக்கியமான தருணத்தில் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் முதல்வரின் ராஜினாமா கடிதம் கிழித்தெறியப்பட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. முதல்வரின் ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித்தெறியும்படி வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.