மணிப்பூர்: மணிப்பூர் மாநில கலவரத்தால் 14,000 பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டோலா சென் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மணிப்பூரில் நிலவும் சூழல் காரணமாக சுமார் 14,763 பள்ளி செல்லும் மாணவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் புதிய பள்ளியில் சேர்க்கை பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் அனைத்து நிவாரண முகாமுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் முகாம்களில் உள்ள பள்ளி மாணவர்களில் சுமார் 93.5 சதவீதம் பேர் அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.