டெல்லி: மராட்டியத்துக்கு 13 மாதங்களில் 10 முறை வந்த பிரதமர் மோடி, ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்று உத்தவ் சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி மீது குற்றச்சட்டியுள்ளார். உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல. உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மராட்டியத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதால் மோடி இங்கு வருகிறார். இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது. கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.