டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையற்றினார். மக்களவையில் புதிதாக தேர்வான எம்பிக்கள் தற்போது பதவியேற்ற நிலையில் கூட்டு கூட்டத்தில் திரெளபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர்.பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” எனத் தெரிவித்தார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாக குடியரசுத் தலைவர் கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.அத்துடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றி பேசியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘நீட் நீட் எனவும் பாதுகாப்புத் துறை குறித்து பேசும் போது, அக்னிவீர் எனவும் முழக்கமிட்டனர்.
மேலும். வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது என்றும் ஜனாதிபதி பேசும் போது, மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதனிடையே இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலம் குறித்து பேசிய முர்மு, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25ம் தேதி எமர்ஜெஞ்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது என பேசியபோதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.