மணிப்பூர்: மியான்மரில் இருந்து பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற குக்கி இனத்தை சேர்ந்த 900 பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளதாக வந்த செய்தி உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பான மோதலில் இதர பிறப்படுத்தப்பட்ட மெய்த்தி இன மக்களும், பழங்குடியின குக்கி இன மக்களும் ஓராண்டுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர்.
மெய்த்தி இன மக்கள் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்த பயிற்சி பெற்ற 900 குக்கி இளைஞர்கள் மணிப்பூரில் ஊடுருவி இருப்பதாக கடந்த 16ம் தேதி தகவல்கள் வெளியாகியது. 30 குழுக்களாக பிரிந்து மணிப்பூர் காட்டுப் பகுதிகளுக்குள் பதுங்கி இருந்த குக்கி கிளர்ச்சியாளர்கள் இந்த மாதம் 28ம் தேதி மெய்த்தி மக்கள் வாழும் இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் செய்தி வெளியானது. அண்டை நாடனை மியான்மரில் பயிற்சி பெற்ற குக்கி இளைஞர்கள் வனத்தில் சண்டையிடவும், டிரோன் குண்டுகளை வீசவும், ராக்கெட் குண்டுகளை வீசவும் பயிற்சி பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலை மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்கும் உறுதி செய்து இருந்தார். ஆனால் நேற்று இம்பாலில் ஆய்வு செய்த மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங், ஊடுருவலுக்கான நடைமுறை சாத்திய கூறுகள் குறைவு என்று தெரிவித்துள்ளார். எனவே உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். என்றபோதும் மக்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி கூறியுள்ளார்.