ஆவடி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த உதவி ஆணையர் கந்தன் சத்துவன்(48) ஆவடி டேங்க் பேக்டரியில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-2024 ஆண்டுக்கான மத்திய ரிசர்வ் காவல் படை வீரருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் 2023 எழுத்து தேர்வின் போது திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கிரண் சிங் ரத்தூர்(21) என்பவருக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற உடல் தகுதி சோதனையின் போது கிரண் சிங் ரத்தூரின் கைரேகை, புகைப்படமும் எழுத்துத் தேர்வு எழுதியவரின் கைரேகை, புகைப்படமும் ஒத்துப்போகாதால் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரத்தூரின் சான்றிதழை ஆய்வு செய்த செய்தபோது, போலியான நபர் தேர்வு எழுதியது உறுதி செய்யப்பட்டது. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் கிரண் சிங் ரத்தூரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.