திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 1ம் தேதியான இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் நடை திறப்பார்கள். இன்று முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. நேற்று பிற்பகல் 2 மணி முதல் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. கன மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி நேற்று முதல் நாளிலேயே தரிசனம் செய்தனர்.