சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது. மாஞ்சோலை பகுதி மக்கள் நலச் சங்க செயலாளரும், மதிமுக சட்டத்துறை செயலாளருமான வழக்கறிஞர் அரசு அமல்ராஜ் தலைமையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் என்னை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத்தர கோரினர். அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்க உரிய ஏற்பாடு செய்துள்ளேன். வேறு எந்த தொழிலும் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேயிலை தோட்ட நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும், அவர்கள் வசிப்பதற்கு போதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் உடனடியாக உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.