சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நெற்பயிர்களை புதிய வகை பறவைகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மானாமதுரை வட்டாரத்தில் உள்ள பதினெட்டாம்கோட்டை, இடைகாட்டூர், பெரும்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் நடவு செய்யப்பட்டு பாதி பயிர் வளர்ந்துள்ளது. அங்குள்ள நீர் நிலைகளுக்கு வரும் புதிய வகை பறவைகள் வளர்ந்திருக்கும் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த பறவைகள் தண்டு பகுதியை துண்டித்து விடுவதால் நெற்பயிர்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வட்டாரத்தில் 500 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பறவைகள் மற்ற விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு முன்பு இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இல்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.