சென்னை: தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயம் சார்ந்த உற்பத்தி பங்களிப்பை பெருக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டு கடன் வழங்கும் திட்டத்தை பால்வளத்துறை நடத்தி வருகிறது. 2 மாதங்களில் சுமார் ரூ.210 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் பெடரல் வங்கியுடன் இணைந்து ஒரு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி விவசாயிகளிடமிருந்து கடன் விண்ணப்பம் பெற்ற உடன் தாமதமின்றி அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். வட்டி 9.5 சதவிகிதம். 24 தவணையில் திரும்ப கட்ட வேண்டும்.
ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை எந்த பிணையும் இன்றி கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடனை திரும்ப செலுத்த உதவும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையில் 1% ஊக்கத் தொகை வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற உதவும். இதுவரை 1,69,673 கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியுடைய அனைவருக்கும் கடன் வழங்கப்படுகிறது. 10 பால் உற்பத்தியாளர்களுக்கு சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடன் வழங்கினார். ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத், எஸ்.பெடரல் பேங்க் அலுவலர்கள் இக்பால் மனோஜ், கவிதா பங்கேற்றனர்.