கும்லா: மனிதர்களின் சிலர் தன்னை கடவுள் என்று கூறுகிறார்கள் என்று பிரதமர் மோடியை மறைமுகமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் விமர்சனம் செய்தார். மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை. கடவுள்தான் இந்த பூமிக்கு என்னை அனுப்பினார் என்று கூறினார். அவரது பேச்சு தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் இதுபற்றி விமர்சனம் செய்து இருந்தார். இந்தநிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் நடந்த கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டத்தில் கலந்து கொண்டு மோகன்பகவத் பேசியதாவது: முன்னேற்றத்திற்கு எப்போதாவது முடிவு உண்டா?. நிச்சயமாக இல்லை. நமது இலக்கை அடையும் போது, இன்னும் செல்ல வேண்டியது இன்னும் இருக்கிறது என்று பார்க்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். பின்னர் தேவர் என்று கூறுகிறான். பின்னர் தன்னை கடவுள் என்று கூறுகிறார். அந்த கடவுள் தன்னை விஸ்வரூபம் என்று கூறுகிறார். ஆனால் விஸ்வரூபம் என்பது இன்னொரு சக்தி. அந்த சக்தியை மனிதர்கள் யாரும் அடையமுடியுமா என்பது தெரியவில்லை. நமது உள் மன ஆசைகளுக்கு முடிவே இல்லை.
அதே சமயம் நமது நாட்டின் எதிர்காலம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. நல்லது நடக்க வேண்டும், அதற்காக அனைவரும் பாடுபடுகிறோம். நாங்களும் முயற்சிகள் செய்கிறோம். இந்திய மக்கள் தங்கள் சொந்த இயல்புகள் அடிப்படையில் வாழ்கிறார்கள். பலர் பெயர் அல்லது புகழுக்காக ஆசைப்படாமல் நாட்டின் நலனுக்காக உழைத்து வருகின்றனர். 33 கோடி தெய்வங்கள் மற்றும் 3,800 க்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுவதால், உணவுப் பழக்கவழக்கங்கள் கூட வித்தியாசமாக இருப்பதால், எங்களிடம் வெவ்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், நம் மனம் ஒன்றே. மற்ற நாடுகளில் அதைக் காண முடியாது. நாட்டின் முன்னேற்றத்துக்காக நாம் உழைக்கும்போது, நமது வளர்ச்சியும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.