கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான்,கீர்த்தி ஆசாத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரும் மக்களவை தேர்தலில்,தனித்து போட்டியிடுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலில் போட்டியிடும் 42 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.
இதில், பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்,முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத், மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய மகுவா மொய்த்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹ்ரம்பூரில் நிறுத்தப்பட்டுள்ளார். பர்தாமான் துர்காபூரில் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகிறார். மகுவா மொய்த்ரா மீண்டும் கிருஷ்ணாநகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜியே மீண்டும் போட்டியிடுகிறார்.
தற்போதைய பஷீர்காட் எம்பியான நஸ்ரத் ஜகானுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பஷீர்காட் தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காளியில் பயங்கர கலவரம் நடந்தது. இங்கு முன்னாள் எம்பி ஹாஜி நூருல் இஸ்லாம் நிறுத்தப்பட்டுள்ளார். அசன்சால் தொகுதி வேட்பாளராக பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்பியாக இருந்த 16 பேருக்கு அந்த கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.7 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.