மாமல்லபுரம் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் பயணி ராட்சத அலையில் சிக்கி பலி: மகன் கண் முன் சோகம்

மாமல்லபுரம்:இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி பிரிட்ஜெட் டெய்லர் (84). இவர், தனது மகன் ரூபர்ட் டெய்லர் (58) என்பவருடன் சுற்றுலாவுக்காக கடந்த 6ம் தேதி மாமல்லபுரம் வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். இருவரும், பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, தாங்கள் கொண்டு வந்த விலை உயர்ந்த கேமராவில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், பிரிட்ஜெட் டெய்லரும், அவரது மகனுமான ரூபர்ட் டெய்லரும் நேற்று மதியம் மாமல்லபுரம் மீனவர் குப்பம் கடற்கரையில் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை மூதாட்டி பிரிட்ஜெட் டெய்லரை இழுத்துச் சென்றது. அப்போது, அருகில் இருந்த அவரது மகன் ரூபர்ட் டெய்லர் தாயை மீட்க போராடினார். ஆனால், ராட்சத அலை மூதாட்டியை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

இதையடுத்து, மீனவர்கள் படகு மூலம் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், சிறிது நேரத்தில் மூதாட்டி பிரிட்ஜெட் டெய்லர் இறந்த நிலையில், அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து தனது மகனுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்து, கடலில் மூழ்கி 84 வயது பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது