மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல் நேற்று காலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கடல் நீர் குடியிருப்பு வரை வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 2500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

இப்பகுதி, மீனவர்கள் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை முதல் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 5 அடி உயரத்துக்கு எழும்பி, கரையை நோக்கி பாய்ந்து வந்தன. இதனால், கரை பகுதியை தாண்டி, பல மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் குடியிருப்பு பகுதி வரை வந்து, அங்குள்ள கடற்கரை உணவகங்களை வேகமாக தாக்கியது. மேலும், 5 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுக்குள் அலைகளின் சீற்றம் அதிகரித்ததால், மாமல்லபுரம் உள்பட சுற்று வட்டார மீனவ குப்பங்களில் பல அடி தூரத்துக்கு கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். இதன் காரணமாக, தங்களின் படகு மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைத்தனர். தற்போது, மாமல்லபுரத்தை பொறுத்தவரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர்குப்பம் கடற்கரை சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை