மாமல்லபுரம்: மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் இல்லாததாலும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. மாமல்லபுரம் கிழக்கு ராஜவீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், கடந்த 3 மாதமாக மேலாளர் இல்லை. ஏற்கனவே, இங்கு 16 ஊழியர்கள் பணியாற்றினர். தற்போது, 5 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், தற்போது பணியாற்றும் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் பணப்பரிவர்த்தனை, பயிர்க்கடன், கறவை மாட்டுக்கடன், முத்ரா கடன், கல்வி கடன் எனப் பல்வேறு நடவடிக்கைகளுக்காக வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், அங்குள்ள சில ஊழியர்களுக்கும் அடிக்கடி வாய் தகராறு முற்றி, சில நேரங்களில் கைகலப்பாகவும் மாறும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து மேலாளர் மற்றும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.