மாமல்லபுரம் அருகே கார் விபத்து வழக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர்

சென்னை: கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகாஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் கடந்த 2021 ஜூலை 21ம்தேதி அவரது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு காரில் சென்னை திரும்பினார். அப்போது மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஐதராபாத்தை சேர்ந்த வள்ளி பவனி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது, நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அவரை வரும் செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Related posts

கேரள சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது

பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் TN-Alert கைப்பேசி செயலியினை வெளியிட்டார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

அரியானா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைகிறது: இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் மும்முரம்