செங்கல்பட்டு: மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமை (20.10.2024) நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் வந்துள்ளனர். அவர்கள் அங்கு நோ பார்க்கிங் வழியாக காரை பார்க் செய்ய முயன்றனர்.
இதனால், அங்கு பணியிலிருந்த காவலாளி ஏழுமலை என்பவர், காரை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் மற்றும் NO ENTRY வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றுள்ளார். ஆனால், காரிலிருந்த நபர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று NO ENTRY வழியா செல்ல முயன்றனர்.இதனால், காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறாயா எனக்கூறி ஆவேசமடைந்து, காவலாளி மீது தாக்குதல் நடத்தினர். காரில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காவலாளியை கடுமையாக தாக்கினர். காவலாளியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலாளியை தாக்கிவிட்டு காரில் தப்பிய 3 பேர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவுசெய்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டனர்.