மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

சுற்றுலாத்தலமாக மட்டும் இருந்துவிடாமல் நம் முன்னோர்களின் கலை நுணுக்கங்களையும் படைப்பாற்றலையும் பறைசாற்றும் வரலாற்றுச்சின்னங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவற்றில் பிரமிக்கத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்கவையாக மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் நினைவுச்சின்னங்கள், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களைச் சொல்லலாம். இப்பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் கட்டமைப்புகளில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளக்கூடியவை ஆகும். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோயில்களில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் ஒன்றாகும்.மாமல்லபுரம் சிற்பங்களில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்ச்சிலைகள், குகைக் கோயில்கள் நல்ல உறுதித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் கூடிய நினைவுச் சின்னங்கள், அழகிய சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. புராணக் கதைகள், கடவுள்கள், விலங்கினங்கள் போன்ற அனைத்து உருவங்களும் தெளிவாகச் சுவர்களில் வடிக்கப்பட்டுள்ளன. அனைத்துச் சிற்பங்களும் தத்ரூபமாகக் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கோயில்கள் பல்லவ மன்னர்களில் நரசிம்மவர்ம பல்லவர் 1 மற்றும் நரசிம்ம வர்ம பல்லவர் 2 ஆகிய மன்னர்கள் காலத்தில் முழுமை பெற்றவை. கடற்கரைக் கோயில் இரண்டு சன்னதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதனச் சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிகொண்ட நிலையில் ஜலசயனப் பெருமாள் காட்சியளிக்கின்றனர். கடற்கரையின் ஓரம் இருப்பதால் உப்புக்காற்றால் சிலை வடிவங்கள் சேதமடைந்துள்ளன.

இக்கடற்கரை கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசிக் கோயில் வளாகம் என்று, இது இப்போது ஊகிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்தக் கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கோயிலின் அடித்தளமானது கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததால் சுனாமியால் உருவான அலைகளைத் தாக்குப்பிடித்தது. கோயிலைச் சுற்றிக் கடற்கரையில் எழுப்பப்பட்டிருந்த தடுப்பு அமைப்புகளும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்தன.

 

Related posts

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

76 வயதாகும் மனைவியை கொலை செய்த 84 வயதாகும் கணவர்: கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டில் படைபயிற்சி சென்ற நபர் வெட்டிக்கொலை