மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணமை ஊராட்சியில் ஜெகஜீவன் ராம் நகர், பரசுராமன் நகர், லிங்கமேடு மற்றும் சிவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருக்களில் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடும்பங்களில் நடைபெறும், சுப நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் செய்வதற்கு இந்த ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் இல்லை. எனவே, இவர்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு 8 கி.மீ. தூரம் உள்ள மாமல்லபுரம், 13 கி.மீ தூரம் உள்ள திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களையே நாட வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், மணமை ஊராட்சியில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.